திண்டுக்கல் :
நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சக்திராஜன் (வயது 39). இவர் திண்டுக்கல்லில் உள்ள ராணுவ வீரர்களுக்கான கேன்டீனில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவருடன் அவரது சகோதரி மகள் கோகிலா (18) என்பவர் சென்றார். கோபால்பட்டியை அடுத்த கணவாய்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் மில் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சக்திராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயமடைந்த கோகிலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.