மண்டியா: கே.ஆர்.பேட்டை அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுத்தை அட்டகாசம்
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா ஜக்கனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. அந்த சிறுத்தை, கிராமத்தையொட்டி உள்ள தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடும் ஆடு, மாடுகளை அடித்து கொன்று வந்தது.
இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
கூண்டில் சிக்கியது
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தப்பகுதியில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். அதில் இரையாக நாய் ஒன்றையும் கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த சிறுத்தை, கூண்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை வேட்டையாட முயன்றது. அப்போது அந்த சிறுத்தை வசமாக கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.
இதுபற்றி நேற்று காலை கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.