மாவட்ட செய்திகள்

ராஜபாளையத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் - 20 பேர் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ராஜபாளையத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஜவகர் மைதானம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி மற்றும் சரண்டர் உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 20 அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

SCROLL FOR NEXT