மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் தரையிறங்கிய மேக கூட்டம்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேக கூட்டம் தரையிறங்கியது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் உள்ள நட்சத்திர ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது.

மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பியர்சோழா உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக, பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழையும் அவ்வப்போது மிதமான மழையும் பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மழை பெய்யவில்லை. பகல் நேரத்தில் லேசான வெயில் இருந்தது.

இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் மேக கூட்டம் தரையிறங்கியது. மலை மீது வெண்ணிற போர்வை போர்த்தியதை போல் மேக கூட்டம் தவழ்ந்து சென்ற ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT