சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் தினசரி சராசரியாக 5 ஆயிரத்து 200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மைப் பணியாளர்களால் தினமும் வீடுகளில் குப்பை சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் வீடுகளில் இருந்து உற்பத்தியாகும் குப்பைகளை பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து முறையாக மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் தெரிவிக்கின்றன. எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத தனிநபர் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 15 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.
அவ்வாறு நோட்டீஸ் வழங்கிய 15 நாட்களுக்கு பின்னரும், குப்பைகளை தரம் பிரித்து வழங்காத தனி நபர் வீட்டினருக்கு ரூ.100 அபராதமும், அடுக்குமாடி குடியிருப்பினருக்கு 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.