புதுச்சேரி,
நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அந்த நாளை காங்கிரஸ் கட்சி கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது வங்கிகளில் காத்து நின்று உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது திடீரென பிரதமர் மோடியின் உருவ படத்தை செருப்பால் அடிக்க முயற்சி செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக மாணவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.