சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், அரசு வக்கீல்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ஏ.அமல்ராஜ், ஆர்.தினகரன், ஏ.அருண் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகளும், அரசு தரப்பு குற்றவியல் வழக்கு தொடர்புத்துறை துணை இயக்குனர்கள் டி.கோபிநாத், பன்னீர்செல்வம், கவுரி அசோகன் மற்றும் சென்னை அரசு வக்கீல்கள், எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன், தாம்பரம், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, செசன்சு கோர்ட்டு அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கோர்ட்டில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம் குறித்தும், வழக்குகள் தாமதமாவதற்கான காரணங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. சாட்சிகள் விசாரணையை மேம்படுத்துதல், பிடி ஆணைகளை நிறைவேற்றுதல், அரசு சாட்சிகளை விரைந்து விசாரணை செய்தல், பிணை உத்தரவு ரத்து செய்ய முறையான பதிவு செய்தல், வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை பெற்று தருதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.