சென்னை அம்பத்தூர் சித்த ஒரகடம் பகுதியில் வசித்து வந்தவர் சுதர்சனம்(வயது 44). இவருக்கு ஒரு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம் அம்பத்தூர் ஓம் சக்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (62) என்பவர் இணை கமிஷனரிடம் கொடுத்த நில அபகரிப்பு புகாரை தொடர்ந்து அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார் சுதர்சனம் மற்றும் மணலியை சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் மரணத்திற்கு புகார்தாரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தான் காரணம் என கூறி சுதர்சனத்தின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று உதவி கமிஷனர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.