குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஏ.கொல்லப்பட்டியில், பாளையம்-அரவக்குறிச்சி சாலையை புள்ளிமான் ஒன்று நேற்று கடந்தது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மான் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மான் உயிருக்கு போராடியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அய்யலூர் வனச்சரக அலுவலர் மோகன், வனவர் ராமசாமி, வனக்காப்பாளர் கணபதி, வனக்காவலர் ரெங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதேபோல் ஆர்.வெள்ளோடு கால்நடை மருத்துவர் தேவேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று, புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அய்யலூர் வனச்சரக அலுவலகத்திலேயே மானின் உடல் புதைக்கப்பட்டது. விபத்தில் பலியான புள்ளிமானுக்கு 1 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.