வில்லியனூர்,
வில்லியனூரை அடுத்த ஆரியபாளையத்தில் அரசுக்கு சொந்தமான வடிசாராய ஆலை உள்ளது. இந்த ஆலையில் தினமும் சுமார் 60 ஆயிரம் லிட்டர் சாராயம் உற்பத்தி செய்யப்பட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாராய கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இங்கு சுமார் 200 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இங்கு பணியாற்றி வருபவர் களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஆலையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாராய ஆலைக்கு என நிரந்தரமாக மேலாண்மை இயக்குனரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சாராய ஆலை தொழிலாளர்கள் நேற்று ஆலையின் நுழைவுவாயில் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சாராய உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டதால் நேற்று சாராய கடைகளுக்கு சாராயம் வினியோகம் செய்யப்படவில்லை. அதனால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
சாராய ஆலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் செங்கதிர் செல்வன் கூறும்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (வெள்ளிக்கிழமை) போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.