மாவட்ட செய்திகள்

ஓமலூர் அருகே தி.மு.க.-பா.ம.க.வினர் மோதல் கார் கண்ணாடி உடைப்பு; போலீஸ் குவிப்பு

ஓமலூர் அருகே தி.மு.க.-பா.ம.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. மலும் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் நேற்று விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் எம்.பி. கலந்து கொண்டு, விவசாயிகள், நெசவாளர்கள், கரும்பாலை உரிமையாளர்கள், மலர் சாகுபடியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் ஓமலூர் அருகே உள்ள தாராபுரத்தில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பூசாரிப்பட்டிக்கு தயாநிதிமாறன் எம்.பி. சென்றார். இதற்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்.பி. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறித்தும், முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் எம்.பி. குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

கருப்புக்கொடி

இதை அறிந்த பா.ம.க.வினர் ஆத்திரம் அடைந்தனர். இதனால் பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் பூசாரிப்பட்டி மேம்பாலத்தில் இருந்து தயாநிதி மாறன் எம்.பி.க்கு கருப்புக்கொடி காட்ட ஊர்வலமாக பூ மார்க்கெட்டை நோக்கி கருப்புக்கொடிகளுடன் சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த தி.மு.க.வினர் கார்களை பா.ம.க.வினர் வழிமறித்து முற்றுகையிட்டனர். ஆனால் அதற்கு முன்பாகவே தயாநிதி மாறன் எம்.பி.யின் கார் சென்று விட்டது. இதனிடையே தி.மு.க.வினர் வந்த கார்களை பா.ம.க.வினர் வழிமறித்த போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் எதிர்பாராதவிதமாக தி.மு.க.வினர் வந்த ஒரு காரின் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு தி.மு.க.வினருக்கும், பா.ம.க.வினருக்கும இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலைமறியல்

உடனே அங்கு வந்த போலீசார் 2 தரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சமரசம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து பா.ம.க.வினரை கைது செய்யக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பா.ம.க.வினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியில், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து தி.மு.க.வினருக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினரும் ஒருவர், மீது ஒருவர் கற்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் குழாய்களை வீசி மோதிக்கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சமாதானம்

பின்னர் இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரு மணி நேரம் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு