மாவட்ட செய்திகள்

திருச்சியில் மனு தர்ம சாசன நகலை எரிக்க முயற்சி திராவிடர் கழகத்தினர் 67 பேர் கைது

திருச்சியில் மனு தர்ம சாசன நகலை எரிக்க முயன்ற திராவிடர் கழகத்தினர் 67 பேரை போலீசார் கைது செய்தனர்.

மலைக்கோட்டை,

திருச்சியில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் இருப்பதாக கூறி மனு தர்ம சாசன நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு கூடிய திராவிடர் கழகத்தினர், லால்குடி மாவட்ட மகளிரணி தலைவி அரங்கநாயகி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெண் இனத்தை இழிவுபடுத்தும் வாசகங்களை கொண்டுள்ள மனுதர்ம சாசன நூலை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் நற்குணம், ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள், மனுதர்ம சாசன நகலை திடீரென தீ வைத்து எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுக்க முயன்றனர். மேலும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 67 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி மதுரை சாலை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT