மாவட்ட செய்திகள்

சொட்டுநீர் பாசனம் குழி அமைக்க மானியம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

சொட்டுநீர் பாசனம் குழி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

தூத்துக்குடி,

தோட்டக்கலைத்துறையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பு அமைப்பதற்கான குழி எடுத்தலுக்கு முதன்முறையாக மானியம் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசன திட்டத்தில் பாசன கருவிகளை நிறுவ குழி எடுத்தல் மிகவும் முக்கியமானது ஆகும்.

தற்போது சொட்டுநீர் பாசனம் அமைக்க குழி எடுத்தலுக்கு எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகப்பட்சமாக 2 எக்டேர் வரை மானியம் பெறலாம்.

இதற்கு விவசாயிகள் பதிவு செய்யும்போது, தங்களது வங்கி கணக்கு புத்தக நகல் அளித்தல் வேண்டும். பணியானை வழங்கப்பட்ட பின்னர் ஒரு அடி முதல் 2 அடி அகலம் வரையிலும், ஆழம் 2 அடிக்கு குறையாதவாறும் விவசாயிகள் சொந்த செலவில் குழி எடுத்தல் வேண்டும்.

குழி எடுத்த பின்பு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், திடல் ஆய்வு மேற்கொள்வார். அதன்பிறகு உரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின்னர் பதிவேற்றம் செய்ததற்கான ஆவணத்தை விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் அளித்து மானியம் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT