மாவட்ட செய்திகள்

எருமப்பட்டி அருகே 2,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

எருமப்பட்டி அருகே 2,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

நாமக்கல்:

எருமப்பட்டி அருகே 2,100 ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் குடிமை பொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், தனித்துணை தாசில்தார் ஆனந்தன், தனி வருவாய் ஆய்வாளர் சியாம் சுந்தர் அடங்கிய குழுவினர் நேற்று காலையில் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது வாகனத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்துடன் 42 சாக்கு மூட்டைகளில் இருந்த சுமார் 2,100 கிலோ ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த குற்றபுலனாய்வுத்துறை போலீசார் சரக்கு வாகனத்தின் டிரைவர் பவித்திரம் புதூரை சேர்ந்த அன்பரசன் (வயது 31) என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.