மாவட்ட செய்திகள்

சொட்டு மருந்தா?... கவனம்!

கண்களில் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கண்களில் பாதிப்பு ஏற்படும்போது அதைச் சரிசெய்வதற்கு திரவ நிலையில் உள்ள சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

ஆனால் அதுபோன்ற சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்நாட்டில், சொட்டு மருந்து பயன்படுத்தும்போது ஏற்பட்ட ஓர் அசம்பாவிதத்தைத் தொடர்ந்துதான் மருத்துவர்கள் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.

64 வயதான ஒரு நபர், சொட்டு மருந்துக்குப் பதில் தவறுதலாக நகப்பூச்சை கண்ணில் விட்டிருக்கிறார். இதனால் அவரது பார்வைத் திறன் மங்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதுபோன்ற குழப்பங்களுக்குக் காரணம், சொட்டு மருந்துகள் அடைக்கப்பட்டு வரும் புட்டிகளைப் போலவே வேறு சில திரவப் பொருட் கள் அடைக்கப்படும் புட்டிகளும் இருப்பதாகும்.

நகப்பூச்சு, சில வகை பசைகள் இதுபோல சிறு புட்டிகளில் அடைக்கப்பட்டு வருவதால் சொட்டு மருந்தை கண்ணில் இடும்போது கவனமாகச் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதிலும் சொட்டு மருந்து களைப் பயன்படுத்துவோர் பெரும்பாலும் முதியவர்களாக இருப்பதாலும் தவறு நேர்ந்து விடுகிறது.

எனவே சொட்டு மருந்து புட்டிகளின் வடிவத்தை மாற்ற வேண்டும் என்று இங்கிலாந்து மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருந்து விஷயத்தில் எங்கேயும், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்!

SCROLL FOR NEXT