விழுப்புரம்,
விழுப்புரத்தில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த தியேட்டரின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை விழுப்புரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் நகராட்சி கமிஷனர் லட்சுமி, நகர்நல அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வராஜ், ரமணன், களப்பணியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் டெங்கு கொழுசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தியேட்டரின் பின்புறத்தில் தீயணைப்பதற்காக தொட்டியில் நிரப்பி வைத்திருக்கும் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததும் அந்த தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த கொசுப்புழுக்களை அழித்தனர்.
இதையடுத்து டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த அந்த தியேட்டரின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரத்தை நகராட்சி அதிகாரிகள் அபராதமாக விதித்தனர்.