மாவட்ட செய்திகள்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுதலையான 8 பேர் கோர்ட்டில் கையெழுத்திட்டனர்

கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுதலையான 8 பேர் திருச்சி கோர்ட்டில் கையெழுத்திட்டனர்.

திருச்சி,

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை ஜெயராமன் உள்பட 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் 8 பேர் திருச்சி கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

கோர்ட்டில் ஆஜர்

இந்த நிபந்தனையின் அடிப்படையில் திருச்சி கோர்ட்டில் கையெழுத்திடுவதற்காக நேற்று விடுதலை சுடர், முருகன், சாமிநாதன், செந்தில், சந்தோஷ், வெங்கட்ராமன், தர்மராஜன், சிலம்பரசன் ஆகிய 8 பேர் வந்தனர். திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் ஆஜராகி அவர்கள் கையெழுத்திட்டனர்.

வழக்கை திரும்ப பெற கோரிக்கை

அவர்கள் கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த போது தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் புலியூர் நாகராஜன், மாவட்ட தலைவர் செல்வம் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக போராடிய விவசாயிகள் தீவிரவாதிகள் அல்ல, எனவே அவர்கள் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை மாநில அரசு திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என புலியூர் நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT