சேலம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்றுமுன்தினம் முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதியவர்களுக்கு இந்த மாதத்திற்கான உதவித்தொகை நேற்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தாதகாப்பட்டி, அண்ணாநகர், மூனாங்கரடு, பொம்மனசெட்டி காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் காலை முதலே வங்கியின் முன்பு நீண்டநேரமாக காத்திருந்தனர்.
பின்னர் 10 மணிக்கு வங்கி திறந்ததும் முதியவர்கள் பணம் வாங்குவதற்காக உள்ளே நுழைந்தனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு வங்கிக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் அவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் அருகருகே நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு முதியவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று உதவித்தொகை பெற்று சென்றனர்.