பூந்தமல்லி,
சென்னை முகப்பேர் மேற்கு பஸ்நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செந்தில்குமார், ராஜாராம் ஆகியோர் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.
இதில் ஏ.டி.எம். மையங்களுக்கு நிரப்ப பணம் எடுத்துச்செல்வதாக தெரிவித்தனர். விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 கோடியே 75 லட்சம் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் பூந்தமல்லி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் மதுரவாயல் மேட்டுகுப்பம் மெயின் ரோடு, மின்வாரிய அலுவலகம் அருகே திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜகமல் தலைமையில் நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் வந்த பிரசாந்த் (22) என்பவரிடம் ரூ.65 லட்சத்து 74 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. ஆட்டோவை அலி அக்பர் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் வின்சென்ட் என்ற காவலாளியும் வந்தார்.
அவர்களிடம் விசாரணை செய்தபோது, தனியார் பால் நிறுவனத்தின் சார்பில் பால் விற்பனை செய்த பணத்தை வசூலித்து வந்ததாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்த பணம் பூந்தமல்லி அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய ஆவணங்கள் கொடுத்தபிறகு பணம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 இடங்களில் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.3 கோடியே 40 லட்சத்து 74 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.