மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று கட்ட தேர்தல் நேற்றுடன் முடிந்தது. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாடு மீது எதிர்க்கட்சிகள் சந்தேகப் பார்வையுடன் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் மும்பையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
அப்போது தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவற்றில் சுலபமாக தில்லுமுல்லு செய்ய முடியும். அவ்வாறு முறைகேடு செய்து தான் பா.ஜனதா ஓட்டுகளை பெறுகிறது. 191 நாடுகளில் 18 நாடுகளில் மட்டும் தான் மின்னணு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகளில் 3 நாடுகளில் மட்டுமே இந்த வாக்குப்பதிவு முறை உள்ளது. மற்ற 7 நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்தியாவிலும் பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தலாம்.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் ஒப்புகை சீட்டு எந்திரமான வி.வி.பாட் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒப்புகை சீட்டு 3 விநாடிகள் மட்டுமே காட்டப்படுகிறது. அதை நிச்சயம் 7 விநாடிகளாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.