மாவட்ட செய்திகள்

புதிய கல்வி கொள்கையில் உள்ள குறைகளை களைந்திட வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

புதிய கல்வி கொள்கையில் உள்ள குறைகளை களைந்திட மத்திய அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அந்த கூட்டணியின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் இளவழகன், விஜயா, பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாவு, புஷ்பாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளரும், மாநில துணைச் செயலாளருமான ராஜேந்திரன் ஆர்ப்பாட்ட உரையாற்றினார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். புதிய கல்வி கொள்கையில் 10, 20 பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த பள்ளியாக செயல்படுத்தி கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்விக்கு கேடு விளைவிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு தகுதித்தேர்வு நடத்துவதை கைவிடவும். பிளஸ்-2 வகுப்பு முடித்தாலும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரிகளில் சேர முடியும் என்பதை முற்றிலும் கைவிடவும். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வருவதை கைவிட வேண்டும். மும்மொழி கொள்கையை கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பதை கைவிட வேண்டும். தமிழகத்தில் இருமொழி கொள்கையை நீடிக்க வேண்டும் மற்றும் அரசாணை 145-ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் பாலசந்திரன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்