மாவட்ட செய்திகள்

கோவில் ஊர்வலத்தில் காலில் காயம் இருந்த யானை அழைத்து வரப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி

கோவில் ஊர்வலத்தில் காலில் காயம் இருந்த யானை அழைத்து வரப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலக்காடு,

கேரள மாநிலம் காக்கநாடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவுக்கு திருச்சூரில் இருந்து மகாதேவன் என்ற யானை வரவழைக்கப்பட்டது. யானையின் பின் பகுதியில் உள்ள வலது காலில் ஆழமான புண் இருந்தது. இதை மறைக்க அதன் மீது கருப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. இந்த காலில் தான் பாகன் ஏறி இறங்குவார்.

மதம் பிடித்து உயிர் சேதம் ஏற்படுத்தும் என்பதால் காயம் ஏற்பட்டுள்ள யானைகளை கோவில் விழாவில் ஊர்வலத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் உள்ளது.

அதனையும் மீறி பணத்திற்காக சிலர் கோவில் விழாக் களுக்கு காயம் அடைந்த யானைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

விழாவில் ஒரு யானை கலந்து கொள்ள ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. பணத்துக்காக ஆழமான புண் உள்ள யானையை கோவில் ஊர்வலத்திற்கு பயன்படுத்திய இந்த காட்சியை சிலர் செல்போன் மூலம் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT