சென்னை,
கொரோனா ஊரடங்கு காரணமாக என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு தள்ளிபோய் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும்? என்று மாணவர்கள், பெற்றோரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார்நிலையில் இருப்பதாக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவ்வப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான பணிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு அடுத்த வாரத்துக்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேபோல், கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் அமைக்கப்பட்ட சேவை மையங்களுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டனர். தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆன்-லைன் மூலமாகவே சான்றிதழ் சரிபார்ப்பை நிறைவு செய்வதற்கு ஏதுவான பணிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.