விழுப்புரம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுற்றுப்புற கிராமங்களுக்கும், சென்னை, கடலூர், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
மேலும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் தினசரி வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்களை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சிறப்பு பஸ்களாக மாற்றி திருவண்ணாமலை, திருவக்கரை போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இதனால் சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் செல்லும் பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் சென்னை, வேலூர், ஆரணி, செஞ்சி போன்ற பகுதிகள் மற்றும் விழுப்புரம் பகுதி கிராம புறங்களுக்கு செல்வதற்காக 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களுக்காக காத்திருந்தனர். நள்ளிரவு 1 மணி ஆகியும் வழக்கமான வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் பேருந்து நிலையத்துக்குள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள போக்குவரத்துக்கழக அதிகாரிகளை சந்தித்து, பஸ்கள் வராதது குறித்து விளக்கம் கேட்டனர். அப்போது அதிகாரிகள் பவுர்ணமி என்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களை, சிறப்பு பஸ்களாக மாற்றி திருவண்ணாமலைக்கும், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கும் அனுப்பி வைத்தாக கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பஸ் நிலையம் முன்பு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு, திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், போதிய பஸ்களை உடனடியாக இயக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒரு சில பயணிகள் பஸ் நிலையத்தில் பணியில் இருந்த அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள், ஊழியர்கள் பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பயணிகளை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது வசதி படைத்த சிலர் வாடகை கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பலர் குடும்பத்துடன் பஸ் நிலைய வளாகத்தில் நேற்று அதிகாலை வரை பெரும் சிரமங்களுக்கு இடையே படுத்தபடி காத்திருந்து, பஸ்கள் வந்ததும் சொந்த ஊர்களுக்கும், தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கும் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.