திருத்தணி,
திருத்தணி-சித்தூர் சாலையில் உள்ள அமிர்தாபுரம் அருகே 100 ஆண்டுகள் பழமையான படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. நேற்று மாலை உயரமான ஆலமரத்தின் மேல் பகுதியில இருந்து திடீரென பலத்த சத்தத்துடன் பெரிய கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் கிடந்த ஆலமரக்கிளைகளை கடந்து செல்ல முடியாமல் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையடுத்து ஆலமரக்கிளைகள் முறிந்து விழுந்த சம்பவம் பற்றி அறிந்த நெடுஞ்சாலை துறையினர் அங்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் இருந்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர், திருத்தணி-சித்தூர் சாலையில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.