கோவில்பட்டி,
கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் கூட்டு பண்ணைய திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திட்டங்குளம், டி.சண்முகபுரம், இளையரசனேந்தல் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட 3 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மொத்தம் ரூ.16 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான 9 வேளாண் எந்திரங்களை வழங்கினார். இதில் பல வகை தானியங்களை பிரித்தெடுக்கும் கருவிகள், சுழற்கலப்பைகள், விதை மற்றும் உரமிடும் கருவி ஆகியவை வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், வேளாண்மை துணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் சுப்புலட்சுமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி,
மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.