மாவட்ட செய்திகள்

வாரணாசி தொகுதியில் விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய “அகோரி வேடத்தில் பிச்சை எடுத்து டெபாசிட் செலுத்துவோம்”

வாரணாசி தொகுதியில் விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய அகோரி வேடத்தில் பிச்சை எடுத்து டெபாசிட் செலுத்துவோம் என்று திருச்சியில் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தினத்தந்தி

திருச்சி,

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளையும், உணவுகளையும் இறக்குமதி செய்யக்கூடாது ஆகிய கோரிக்கைகளை தேசிய கட்சிகளால் மட்டுமே நிறைவேற்ற முடியும். எனவே இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் தேசிய கட்சிகள் உறுதி அளிக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஒப்புகொள்கிற தேசிய கட்சி தலைவர்கள் வருகிற 6-ந்தேதிக்குள் விவசாயிகளை டெல்லிக்கு அழைத்து பேச வேண்டும்.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்காவும் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. வாரணாசியில் 111 விவசாயிகள் போட்டியிட ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உறுதி அளிக்க வேண்டும்.

அப்படியில்லை என்றால், விவசாயிகள் வாரணாசி தொகுதியில் கட்டாயம் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய, டெபாசிட் செலுத்துவதற்கு விவசாயிகளிடம் பணம் எங்கு உள்ளது? என கேட்கின்றனர். காசியில் அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி பிச்சை எடுத்ததை போல வருகிற 24-ந்தேதி காசியில் நாங்கள் அகோரி வேடத்தில் பிச்சை எடுத்து வேட்பு மனு தாக்கலுக்கான டெபாசிட்டை செலுத்துவோம். இதனை தவிர்ப்பது தேசிய கட்சி தலைவர்கள் கையில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்