பூந்தமல்லி,
குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (வயது 30). தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உடற்பயிற்சி கூடத்தில் பணி முடிந்து வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் பழுதாகி நின்ற போலீஸ் வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது.
சாவு
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நித்யா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.