மும்பை,
மும்பையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை பரிசோதிக்கும் பணி நடந்தது. இதில் சில நகைகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது. அந்த போலி நகைகளை கல்வாவை சேர்ந்த சுசாந்த் சால்வி(வயது35) என்பவர் அடகு வைத்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வாங்கியிருந்தது தெரியவந்தது.
இது குறித்து நிதி நிறுவனம் சார்பில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து மும்பை, தானே, ரத்னகிரி, கல்வா ஆகிய இடங்களில் உள்ள 6 நிதி நிறுவனங்களில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.13 லட்சத்து 45 ஆயிரம் வரை வாங்கி மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளான ரத்னகிரியை சேர்ந்த ராஸ்பேரி இமானா(வயது34), லியாகத் அப்துல்(43), ஐரோலியை சேர்ந்த அனிகேத் கதம்(34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் போலி நகைகளை தயாரிப்பதற்கு பட்டறை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த போலி நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.