நாமக்கல்,
காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் ஆற்றங்கரையோர பகுதிகளில் இருந்த சில குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பவானிசாகர், சத்தியமங்கலம், பவானி, அம்மாபேட்டை, ஈரோடு கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இவ்வாறு 2 ஆயிரத்து 335 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். 1,324 குழந்தைகள் உள்பட 7 ஆயிரத்து 832 பேர் மீட்கப்பட்டு 67 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் வெள்ளம் பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிடுகிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர் கோவை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து பவானி கூடுதுறை மற்றும் பவானி ஆற்று வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களை பார்த்து ஆறுதல் கூறுகிறார்.
அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் பள்ளிபாளையம் பாலம் வழியாக கருங்கல்பாளையம் வரும் அவர் அங்கும் காவிரி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடுகிறார்.
அதைத்தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் பாளையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆய்வின்போது ஈரோடு, நாமக்கல் மாவட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.