கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப்பொருட்கள் பெறப்பட்டது. அதனை புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று கரூரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். இதில் அரிசி, போர்வை, புடவைகள், நாப்கின், விரிப்புகள், பாய், தலையணைகள், தண்ணீர் பாட்டில்கள், துண்டுகள், சோப்புகள், பற்பசை, கொசுவர்த்திகள், மளிகை சாமான்கள், லுங்கி, மெழுகுவர்த்தி, பால்பவுடர், தீப்பெட்டி, அனைத்து வகையான துணிகள், தேங்காய் எண்ணெய், மரம் அறுக்கும் கருவி, பிஸ்கட் ஆகிய 65 வகையான நிவாரண பொருட்கள் ரூ.62 லட்சத்து 83 ஆயிரத்து 385 மதிப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.