மாவட்ட செய்திகள்

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம்: எடியூரப்பாவுக்கு, பா.ஜனதா மேலிடம் புதிய உத்தரவு மேலும் 3 மாதம் கட்சி தலைவர் பதவியில் நீடிக்க அறிவுறுத்தல்

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும், மாநில தலைவர் பதவியில் மேலும் 3 மாதங்கள் நீடிக்கும்படியும் எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும், மாநில தலைவர் பதவியில் மேலும் 3 மாதங்கள் நீடிக்கும்படியும் எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியை கவிழ்க்க வேண்டாம்

கர்நாடகத்தில் பா.ஜனதா மாநில தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் எடியூரப்பா இருந்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு மாநில தலைவர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார் என்றும், புதிய தலைவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் தலைவர் பதவிக்கு ஆா.அசோக், அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு சென்றிருந்த எடியூரப்பா, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும், கூட்டணி அரசு தானாக கவிழ்ந்தால் ஆட்சி அமைக்க முன்வரும் படி எடியூரப்பாவிடம் அமித்ஷா கூறியுள்ளார்.

இன்னும் 3 மாதங்கள்...

அதே நேரத்தில் மாநில தலைவர் பதவியில் இன்னும் 3 மாதங்கள் நீடிக்கும் படியும் எடியூரப்பாவுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அதாவது, புதிய தலைவரை தற்போதைய சூழ்நிலையில் நியமிக்க மேலிடம் விரும்பவில்லை என்றும், அதனால் எடியூரப்பா தலைவர் பதவியில் இருந்து கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்படியும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை இருந்தாலும், கர்நாடகத்தில் லிங்காயத் சமுதாயத்தினர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததால் தான் 25 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது.

அதனால் தான் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா தலைவர் பதவியில் நீடிக்கும்படி பா.ஜனதா மேலிடம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்-மந்திரியாகி விடலாம் என்று எடியூரப்பா நினைத்திருந்தார். ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று கூறி இருப்பதால், மாநில தலைவர் பதவியில் எடியூரப்பா இன்னும் 3 மாதங்கள் நீடிக்க பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து