ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும். முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள நீரோடையில் துர்வாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கந்தர்வன் கூகூ அந்த நீரோடையில் கந்தர்வ பெண்களுடன் ஜலகிரீடையில் ஈடுபட்டான். இதனால் துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர் கந்தர்வனை முதலையாக மாற சாபமிட்டார். உடனே கந்தர்வன் அவரிடம் சாப விமோசனம் கேட்டபோது, விஷ்ணுவின் சக்ர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும், என்றார்.
இதேபோல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும் போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானையாக சபித்தார். இதனால் மன்னன், கஜேந்திர யானையாக மாறி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் கஜேந்திர யானை தடாகத்தில் பெருமாளுக்கு பூஜைக்காக தாமரைப்பூ பறிக்க சென்றது. அப்போது தடாகத்தில் இருந்த கூகூ முதலை கஜேந்திர யானையின் காலை கவ்வியது. எவ்வளவோ முயன்றும் முதலையின் பிடியில் இருந்து தப்ப முடியாததால் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ரெங்கா, ரெங்கா என்று கூவி தன்னை காப்பாற்ற அழைத்தது.
கருடன் மீது ஏறி அங்கு வந்த பெருமாள், தனது சக்ராயுதத்தால் கூகூ முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையான கஜேந்திரனுக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம் ஆகும். இந்த நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமி நாளில் நடந்ததால் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு எழுந்தருளினார்.
அங்கு பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றார்.
அங்கு நம்பெருமாள், கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மாலை 6.15 மணிக்கு நடைபெற்றது. அப்போது ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். பின்னர் இரவு 8.15 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியின் போது அம்மா மண்டபத்தில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.