புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் (செப்டம்பர்) தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விபசாரத்தில் ஈடுபட்ட அழகிகள் மற்றும் புரோக்கர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு சிறுமி மீட்கப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விபசார வழக்கை, சிறுமி பாலியல் பலாத்கார வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெங்களூருவை சேர்ந்த புரோக்கர் அப்துல் சேக் (வயது 37) என்பவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். பல நாட்களாக தேடப்பட்டு வந்த அவர் புதுவை வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுவை பஸ் நிலையம் அருகே நின்ற அப்துல் சேக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.