மாவட்ட செய்திகள்

விளையாட்டு மைதானத்துக்கு செல்ல தடையாக இருந்த சுவர் இடிப்பு

பெரவள்ளூரில் விளையாட்டு மைதானத்துக்கு செல்ல தடையாக இருந்த சுவர், பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் போலீசார் இடித்து அகற்றினர்.

திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூர் ஜவகர் நகரில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதையும் உள்ளது.

இந்த மைதானத்துக்குள் செல்ல 2 நுழைவு வாயில்கள் உள்ளன. இதன் பிரதான வாயில் ஜவகர் நகர் 2-வது குறுக்கு தெருவிலும், பின்பக்க வாயில் ஜவகர் நகர் 3-வது பிரதான சாலையிலும் உள்ளது.

இந்த மைதானத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடைபயிற்சி செல்லவும், வாலிபர்கள், சிறுவர்கள் விளையாடவும் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதி குடியிருப்புவாசிகளின் ஒரு சங்கத்தினர் ஜவகர் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தின் பின்புற வாயில் இரும்பு கதவை பூட்டி, சிறிய இடைவெளி விட்டு அந்த நுழைவு வாயிலை அடைத்து 3 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பினர்.

இதனால் ஜவகர் நகர் 3-வது பிரதான சாலை பகுதியில் உள்ள பொதுமக்கள் விளையாட்டு மைதானத்துக்கு செல்ல 3 தெருவைச் சுற்றி செல்ல வேண்டியது இருந்ததால் முதியவர்கள், சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனவே விளையாட்டு மைதானத்துக்கு செல்ல தடையாக உள்ள பின்புற வாயில் கதவை திறக்கவும், அதன் முன்புறம் உள்ள சுவரை இடித்து அகற்றவும் ஜவகர் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள குடியிருப்புவாசிகள் மாநகராட்சியில் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால் அதன் மீது மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தின் பின்புற வாயில் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பெரவள்ளுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாநகராட்சியின் 66-வது வார்டு பொறுப்பு உதவி பொறியாளர் பொன்னுரங்கன் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு விளையாட்டு மைதானத்துக்கு செல்ல தடையாக கட்டி இருந்த 3 அடி உயர சுவரை இடித்து அகற்றினர். பின்னர் பூட்டி இருந்த இரும்பு கதவையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வழிவிட்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு