ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஜும்மாகான் (வயது 44) என்பவரை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.
தங்கத்தை கைப்பற்றினர்
அப்போது ஆடையில் தங்க சங்கிலியை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அவரிடம் 25 லேப்டாப்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் சிறிய தங்க வளையங்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 303 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
மேலும் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த விஜயா (57) என்ற பெண்ணை நிறுத்தி விசாரித்தனர். அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 230 கிராம் தங்கமும், அதே விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அஞ்சலி தேவி (36) என்பவரின் உள்ளாடையில் இருந்து ரூ.9 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள 260 தங்கத்தை கைப்பற்றினார்கள்.
4 பேரிடம் விசாரணை
இதைத்தொடர்ந்து, துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த உசேன் (37) என்பவரை சோதனை செய்த போது, உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 476 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
ஆக மொத்தம் 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.50 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 269 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர், பிடிப்பட்டவர்களிடம் தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்?, அதன் பின்னணியில் உள்ளது யார்? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.