மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர்கள்- கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று நாகர்காவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பணியின்போது போலீசாரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அரசு பஸ் கண்டக்டருக்கு பணி பாதுகாப்பு வழங்கத்தவறிய அரசு போக்குவரத்துக்கழக மண்டல நிர்வாகத்தை கண்டித்தும், தீபாவளி பண்டிகை கொண்டாடும் உரிமை மறுக்கப்பட்டு அன்றைய தினம் விடுப்பு மறுப்பு செய்து அனைவரும் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ள நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கி, போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். துணைத்தலைவர் சந்திரன், துணை செயலாளர் நடராஜன், ஆலோசகர் வக்கீல் மகிழ்வண்ணன் உள்பட பலர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். பொதுச்செயலாளர் காமராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடிவில் பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT