மாவட்ட செய்திகள்

அரசு கேபிள் டி.வி. சந்தாதாரர்களுக்கு மேலும் 8 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் அதிகாரி தகவல்

அரசு கேபிள் டி.வி.சந்தாதாரர்களுக்கு மேலும் 8 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடலூர்,

தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமானதை தொடர்ந்து சந்தாதாரர்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 44 ஆயிரத்து 500 சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர மேலும் 8 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் கடலூரில் உள்ள மாவட்ட அரசு கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு வந்து உள்ளன. இதுவரை அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் வாங்காத வாடிக்கையாளர்கள் தங்கள் ஆபரேட்டர்களை அணுகி செட்டாப் பாக்ஸ்களை வாங்கிக்கொள்ளலாம்.

மத்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கு புதிய கட்டணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி அரசு கேபிள் டி.வி.க்கு மாதாந்திர கட்டணமாக 120 ரூபாயுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து 142 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதனுடன் வாடிக்கையாளர்கள் விரும்புகிற கட்டண சேனல்கள் எவை என்பதை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தரும் படிவத்தில் குறிப்பிட்டு கொடுத்தால், வருகிற 1-ந்தேதி முதல் இலவச சேனல்களுடன், வாடிக்கையாளர்கள் விரும்பிய கட்டண சேனல்களையும் பார்த்து மகிழலாம் என்று அரசு கேபிள் டி.வி. தாசில்தார் அன்பழகன் தெரிவித்தார்.