மாவட்ட செய்திகள்

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மோசமான நிர்வாகமே காரணம் கவர்னர் கிரண்பெடி கருத்து

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மோசமான நிர்வாகமே காரணம் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மக்களுக்கு தண்ணீர் கிடைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கேள்வி- பதில் வடிவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் 6-வது பெரிய நகராக சென்னை விளங்குகிறது. அப்படிப்பட்ட முக்கியமான நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நகரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் ஏற்பட்டது. தற்போது தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு என்ன காரணம்?

மோசமான நிர்வாகம்

இதற்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், வித்தியாசமான அதிகாரத்துவம் ஆகியவையே காரணம். மக்கள் அதிக சுயநலமும், கோழைத்தனமான எண்ணமும் கொண்டுள்ளனர். புதுச்சேரியை பாதுகாக்க நாம் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். இல்லையென்றால் சென்னை போன்ற நிலைமை புதுச்சேரிக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT