மாவட்ட செய்திகள்

வேலூரில் ‘ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூரில் ‘ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர்,

32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று நடந்தது. வேலூர் துணை போக்குவரத்துக் கமிஷனர் சுரேஷ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி ஊர்வலத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கிரீன் சர்க்கிள், நேஷனல் சர்க்கிள், மக்கான் சிக்னல், அண்ணா சாலை, திருமலை - திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் வழியாகச் சென்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், பெண் போலீசார், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் உள்பட பலர் 'ஹெல்மெட்' அணிந்து மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி, வெங்கட்ராகவன், வேலூர் போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT