மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பூனாம்பாளையம் செல்லும் வழியில் சிப்பாய் பண்ணை என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஒரு வீட்டில் இருந்து மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்களை மினி லாரியில் ஏற்றி கொண்டு இருந்தனர். உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த மூக்கன்(வயது 45) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடைபோடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவை பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்றும், இவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது.

இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தலைமறைவாகி உள்ள மூக்கன் பிடிபட்டால் தான் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூக்கனை தேடி வருகிறார்கள். மண்ணச்சநல்லூர் அருகே மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு