பூந்தமல்லி,
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்கள் தவிர அனாவசியமாக வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போலீசாரின் அனுமதி சீட்டுடன் சிலர் வெளியூர்களுக்கு வாகனங்களில் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது சென்னை வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் முறைகேடாக அந்த அனுமதிச் சீட்டு வழங்கியதாகவும், அந்த அனுமதி சீட்டுடன் சிலர் வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்கு செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது முறைகேடாக வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கியது உறுதியான நிலையில் போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசத்தை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.