கரூர்,
கரூர் திருமாநிலையூரில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. விழா மேடை அண்ணா அறிவாலயம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார்.
மேடைக்கு மாலை 5 மணி அளவில் வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மைதானம் முழுவதும் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதனைத்தொடர்ந்து செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முறைப்படி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
செந்தில்பாலாஜிக்கு தி.மு.க. ஒன்றும் புதிய இயக்கம் அல்ல. ஏற்கனவே இருந்த தாய் கழகம் தான். தாய், தந்தையை விட்டு பிள்ளைகள் பிரிந்து சென்றாலும், தங்களது பிள்ளைகள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர்கள் காத்திருப்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் நல்ல பிள்ளைகளாக மீண்டும் வந்து சேர்ந்திருப்பவர்களை வரவேற்கிறேன். சரியான நேரத்தில் தான் செந்தில்பாலாஜியும், அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு ஏற்ற பயனை உரிய நேரத்தில் பெறுவார்கள் என்று உறுதி அளிக்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்பட நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் மோடி தோற்க போகிறார் என்ற ஒரு அடையாளத்தை தந்திருக்கிறது. பாரதீய ஜனதாவின் கோட்டை என்ற பெயருக்குரிய மாநிலங்களில் அக்கட்சி தோல்வியை தழுவியிருக்கிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் மாற்றம் வரலாம்.
மத்தியில் பிரதமராக இருக்கிற மோடியும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருக்கிற எடப்பாடி பழனிசாமியும் ஆள்வதற்கு தகுதியில்லாத நிலையில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு செய்யாதுரை, சேகர்ரெட்டி போன்றவர்களை திருப்திபடுத்தினால் போதும். மோடிக்கு பல நாடுகளை சுற்றினால் போதும். எனவே இவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பா.ஜ.க.வின் கோட்டையான மாநிலங்களில் ஓட்டை விழுந்திருக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்து விட்டது. எனவே மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்பட இருக்கிறது. அதனால் தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பார்த்து மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கிரிமினல் கேபினட் என பெரம்பலூர் கூட்டத்தில் நான் ஏற்கனவே பகிரங்கமாக குற்றம் சாட்டினேன். இதுவரை என் மீது அவர்கள் ஒரு வழக்கு கூட போடவில்லை. ஸ்டாலின் உண்மையை தான் பேசியிருக்கிறார் என நினைத்து விட்டார்கள் போலும். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் இருக்கிறது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உடனடியாக எடப்பாடி பழனிசாமி பதறியடித்து டெல்லிக்கு போய் தடை உத்தரவு பெற்றார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன.
இவ்வளவையும் பேசிவிட்டு இங்குள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி பேசாமல் செல்வேனா? போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்குவதற்கு ரூ.300 கோடி டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்று ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. டெண்டர் விதிகள் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கர் என இன்னொரு அமைச்சர் இருக்கிறார். அவர் மீது குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.