மாவட்ட செய்திகள்

சென்னையில் மனைவியை தாக்கிய டி.வி. நடிகர் கைது - பரபரப்பு தகவல்கள்

சென்னை திருவான்மியூரில் மனைவியை தாக்கியதாக டி.வி. நடிகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையை சேர்ந்தவர் ஈஸ்வர் ரகுநாதன் (வயது 34). இவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (31) சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ளார்.

மனைவி ஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து ஈஸ்வர் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஈஸ்வர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுபற்றி ஜெயஸ்ரீ, கணவர் ஈஸ்வரிடம் அடிக்கடி கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் மோதல் சண்டையாக மாறி ஜெயஸ்ரீயை ஈஸ்வர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெயஸ்ரீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயஸ்ரீ அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்தனர். அவரது தாயார் சந்திராவும் (54) கைது செய்யப்பட்டார்.

ஈஸ்வர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT