தேனி,
தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த குப்புசாமி மகன் தினேஷ்குமார் (வயது 20). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும், அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்த முத்தையா மகன் திவாகர் (17) என்பவரும் நண்பர்கள்.
இவர்கள் இருவரும் பாரஸ்ட்ரோடு பகுதியில் உள்ள சக நண்பர்களை பார்ப்பதற்காக, ஒரு மோட்டார் சைக்கிளில் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள காந்திஜி ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை தினேஷ்குமார் ஓட்டிச் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக, ஒரு பள்ளி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பலியானார். திவாகர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து திவாகரின் தந்தை முத்தையா கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.