மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் மீண்டும் போலீஸ் போல் நடித்து, பெண் வியாபாரியிடம் 4 பவுன் நகை அபேஸ்

ஈரோட்டில் மீண்டும் போலீஸ் போல் நடித்து பெண் வியாபாரியிடம் 4 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையம் நாயக்கர் வீதி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 65). இவர் ஒவ்வொரு இடமாக நடந்து சென்று பூ வியாபாரம் செய்து வருகிறார். கஸ்தூரி நேற்று முன்தினம் பூ வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

வீட்டின் அருகில் சென்றபோது, இவருக்கு பின்னால் 2 பேர் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அருகில் வந்ததும், அவர்கள் 2 பேரும் கஸ்தூரியிடம் தாங்கள் போலீஸ் எனக்கூறி மெதுவாக பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கஸ்தூரியிடம், இந்த பகுதியில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கையில் வைத்துக்கொண்டு பத்திரமாக செல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.

இதனால் பயந்துபோன கஸ்தூரி அவசர அவசரமாக தான் அணிந்திருந்த 4 பவுன் நகையை கழற்றி உள்ளார். அப்போது அந்த நபர்கள், ஒரு காகிதத்தில் நகையை பாதுகாப்பாக மடித்து தருவதாக கூறினர். இதை நம்பிய அவர் தன்னிடம் இருந்த நகையை அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அந்த நபர்கள், ஒரு பொட்டலத்தை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர்.

அதை வாங்கிய கஸ்தூரி வீட்டுக்கு போய் பிரித்து பார்த்துள்ளார். ஆனால் பொட்டலத்துக்குள் நகை இல்லை. அந்த மர்ம நபர்கள் அபேஸ் செய்து விட்டு சென்றது தெரிந்தது. அதைத்தொடர்ந்து கஸ்தூரி இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 4 பவுன் நகையை திருடிச்சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபோல் கடந்த 14-ந்தேதி வீரப்பன்சத்திரம் பகுதியில் வைத்து, இடையன்காட்டுவலசு சின்னமுத்து வீதியை சேர்ந்த லீலா என்ற பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடியை மர்ம நபர்கள் போலீஸ் போல் நடித்து பறித்து சென்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே தனிப்படை அமைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வரும் நிலையில், ஈரோடு நகர் பகுதியிலேயே மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே 2 இடங்களிலும் போலீஸ் போல் நடித்து பெண்களிடம் நகையை பறித்து சென்றது ஒரே கும்பலாக இருக்கக்கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.


ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை