காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை, வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன.
அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில் வருவாய்த் துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,1 பயனாளிக்கு கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.
மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள், மகள்கள் இந்திய ராணுவ சேவையில் சேர்த்தமைக்காக தமிழக அரசினால் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 13 பெற்றோர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் போர் வீரர் ஊக்க மானியம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை அவர் வழங்கினார்.