கோவில்பட்டி,
விளாத்திகுளம் பங்களா தெருவைச் சேர்ந்தவர் பாப்பு ரெட்டியார். இவருடைய மகன் சுரேஷ் (வயது 39). கார் டிரைவரான இவர் சொந்தமாக கார் வாங்கி, வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது காரை பழுது பார்ப்பதற்காக, கோவில்பட்டியில் உள்ள ஒர்க்ஷாப்பில் கொண்டு சென்று விட்டார்.
பின்னர் இரவில் சுரேஷ் கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரெயில், சுரேசின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுரேசுக்கு சண்முகலட்சுமி (34) என்ற மனைவியும், பூஜாலட்சுமி (15), பிரியா (13) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.