மண்டியா,
இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய அரசும், கர்நாடக அரசும் குறைத்தாலும், அதன் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. கூடிய விரைவில் பெட்ரோல்-டீசல் விலை 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தங்கள் விளைவித்த பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், அந்த பொருட்களை விற்பனைக்காக எடுத்த செல்ல, வாகனங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளதால் என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளனர்.
கர்நாடகத்தின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் மண்டியா மாவட்டத்தில் அதிகமாக கரும்பு விளைவிக்கப்படுகிறது. தங்கள் விவசாய நிலத்தில் விளையும் கரும்புகளை விவசாயிகள், டிராக்டர்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர். மண்டியா மாவட்டத்தில் மட்டும் பாண்டவபுரா, மண்டியா, கே.ஆர்.பேட்டை, கே.எம்.தொட்டி, கொப்பா என 5 இடங்களில் சர்க்கரை ஆலைகள் உள்ளது.
இந்த நிலையில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வால், டிராக்டர் உரிமையாளர்கள் கடந்த 3 வாரங்களில் டிராக்டர்களின் வாடகைகளை 20 சதவீதம் அதிகரித்து உள்ளனர். தற்போது கரும்பு அறுவடை காலம் தொடங்கி உள்ளது. இதனால், விவசாயிகள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் செலவை சமாளிக்க புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு டிராக்டரின் என்ஜினில் ஒரு டிரைலர் பொருத்தப்பட்டிருக்கும். அதில், 12 டன் கரும்பை விவசாயிகள் ஏற்றி செல்வார்கள். தற்போது, புதிய வழிமுறையில் ஒரு டிராக்டரின் என்ஜினில் 2 டிரைலர்களை பொருத்தி ஒரே முறையில், 24 டன் வரை கரும்பு ஏற்றி செல்கிறார்கள். இதனால், நேரம் மட்டுமின்றி செலவும் மிச்சமாகிறது.
இந்த புதிய வழிமுறையின் மூலும் கரும்பு விவசாயிகள், ஒரு முறை கரும்பை ஏற்றி செல்வதில் ரூ.1,300-ஐ சேமிக்கின்றனர். மேலும், விவசாயிகள் தங்களது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் மூலம் ஒரு டிராக்டரின் என்ஜினில் 2 டிரைலர்களை பொருத்தி சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்கின்றனர்.