மாவட்ட செய்திகள்

மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மும்பை,

தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் செல்லும் மும்பை கிழக்கு விரைவு சாலையில் நேற்று காலை வழக்கம் போல வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டு இருந்தன. இந்தநிலையில் காலை 10 மணியளவில் சயான் - சுன்னாபட்டி இடையே பி.கே.சி. செல்ல கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் கீழ் உள்ள சாலையை மலை பாம்பு ஒன்று கடந்து சென்று கொண்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த பாம்பு அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த காரின் சக்கர பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், பாம்பு பிடிப்பவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி காருக்குள் மறைந்து இருந்த பாம்பை மீட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை சுன்னாப்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT